இந்த வருடத்தின் எரிச்சல் மிகுந்த வாரங்களில் ஒன்றாக கடந்த வாரத்தைக் கருதலாம். என் விண்டோஸ் கைபேசியின் பிரச்சினைகள் கட்டுக்கடங்காது போனது. சமீபத்தில் வாங்கியதுதான். அதுவும் பல விமர்சனங்கள், நுட்ப குப்பைகள் அனைத்தையும் பார்த்து சீப் அண்டு பெஸ்டு என்று எனக்குத் தோன்றியதை வாங்கிப் போட்டேன். வாங்கிய பின் அப்ளிகேஷன்களை நிறுவ ஆரம்பித்த போதுதான் தகறாரு தொடங்கியது.
அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. விண்டோசு தரும் இலவச அப்ளிகேஷன்களில் வழக்கம்போல கட்டுப்பாடுகள். இருக்கும் ஏனைய அப்ளிகேஷன்களும் திருப்திகரமாக அமையவில்லை.
அடுத்த கட்டமாக சில அப்ளிகேஷன்களை நிறுவுகையில் அனுமதி (permission) கோளாறுகள் வந்தன. என்னடா வம்பா போச்சு என்று கூகுளாண்டவரைத் தேடினால் ரிஜிஸ்ட்ரியில் மாற்றவேண்டும். அதற்கு regedit மாதிரியான ஒரு அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம் என்றார்கள். விடிவுகாலம் என்று எண்ணி அதனையும் இறக்கி நிறுவுகையில் அதை நிறுவுவதற்கும் அனுமதி பிரச்சினை வந்தது. அட ஆண்டவா!
சரி போகட்டும் என்று இருக்கிற அப்ளிகேஷன்களை வைத்து ஓட்டலாம் என்றால் வந்தது ஆமை பிரச்சினை. கைபேசி ஆமை வேகத்தில் இயங்கத் தொடங்கியது. இறக்கப் போகும் நோயாளியில் நாடி அடங்குவதைப் போல நாளுக்கு நாள் வேகம் குறைந்தே வந்தது.
என் பயன்பாட்டில் அடுத்த நிலைக்குப் போகாவிட்டாலும் பிரச்சினையின் அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டிய கட்டாயம் வந்தது. மடல் செயலிகள், IM செயலிகள் ஓடவிட்டுட்டா அடுத்த அரை மணி நேரத்தில் தொங்கியது (hang!). வேறு வழியின்றி குளறுபடிகளைக் களைய கட்டாய மராமத்து பணி செய்ய வேண்டிய தேவை வந்தது.
ஆரம்பத்தில் நன்றாகப் பலன் தந்த அந்த மருத்துவம் கடந்த வாரத்தில் பொய்க்கத்தொடங்கியது. Hard reset செய்த அடுத்த ஒரு நிமிடத்திற்குள் கர்ஸர் பொத்தான்கள் இயங்காது. அடுத்தடுத்த தாக்குதலின் கட்டமாக தொங்கிவிடும். 24 மணிநேரத்தில் 24 முறை செத்துப் பிழைத்தது கைபேசி.
சேவை மையம் பிரச்சினைகளைக் கேட்டார்கள். சாம்சங் சேவை மையம் என்னைப் பொறுத்தவரை நாளானாலும் பழுது நீக்கித் தந்துவிடுகிறார்கள். இந்த முறை அவர்களது பதில் என்னை ஏமாற்றம் அடைய வைத்தது. இந்த தொங்கல் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். ஆனால் வேகம், செயலி நிறுவல் அதில் ஏதும் கை வைக்க இயலாது. நான் அந்த சோம்பேறியுடன் குடும்பம் நடத்தவேண்டும் என்றார்கள். கண்ணைக் கட்டுதே சாமி!
ஒரு வழியாக வார இறுதியில் கிடைத்த விலைக்கு அந்த சோம்பேறிக்கு மறுமணம் செய்துவைத்துவிட்டு, கிராமத்து தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆண்ட்ராய்டுக்கு மாறலாம் என்று ஒரு மனதாக முடிவிற்கு வந்து 3 மாதிரிகளை முடிவு செய்து இறுதியில் ஒன்றினை வாங்கி வந்தேன்.
பயன்படுத்தத் தொடங்கிய 1 மணி நேரத்தில் வித்தியாசம் தோன்றியது. இடைமுகம் (interface) பட்டாசு கிளப்பியது. துவங்கவோ அடங்கவோ எடுத்துக் கொள்ளும் நேரமோ மிகக் குறைவு. உதாரணமாக ஜிமெயிலோ, பேஸ்புக்கோ.. விண்டோஸில் பயன்படுத்துவதற்கும் ஆண்ட்ராய்டு செயலியில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசங்கள் மிக அதிகம்.
பயன்படுத்த ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் செயலிகள் கொட்டிக்கிடக்கின்றன. விண்டோஸ் கைபேசியில் இருந்த பிராசசர் வேகம் 50 MHz மட்டுமே அதிகம் என்றாலும் பயன்பாட்டு வேகத்தில் பட்டையக் கிளப்புகிறது.
தமிழ் பயன்பாடு என்பது பிஸ் போன்களில் இன்னும் வந்து சேரவில்லை. Opera Mini Browser மூலமாக தமிழ் சேவியில் உருப்பெற்று படிக்க மட்டும் முடிகிறது (தகவலுக்கு நன்றி முகுந்த்). மற்றபடி எழுதுவது இதுவரை சாத்தியப்படவில்லை. பிரபல கும்பனியில் நுட்பக் குழுவிடம் கேட்டபோது அது பற்றி நினைத்துக் கூட பார்க்காதே என்கிற மாதிரி பதில் அனுப்பினார்கள். ஆனால் சந்தோஷப்படவேண்டிய விசியம், லினக்ஸில் தமிழ் உட்பட இதற இந்திய மொழிகளைக் கையாளும் பாங்கோ லைப்ரரி தற்போது ஆண்ட்ராய்டில் சேர்க்கப்படாவிட்டாலும், சோதனைக் கூடத்தில் உள்ளது. அடுத்தடுத்த பதிப்புகளில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான விசியம்!
எனவே கைபேசியிலும் பரவலாக தமிழ் எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை.
தமிழ் வாழட்டும், யூனிக்ஸ் வழி நுட்பம் வளரட்டும்.
நன்றி.

விண்டோஸ் மொபைலிலேயே ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.க்கு மாறலாம் என்கிறார்களே அது உண்மையா? எனது விண்டோஸ் (o2 xda atom life) நன்றாக வேலை செய்கிறது. தமிழ் ஃபாண்ட்களை டவுன்லோட் செய்தால், தமிழில் எழுத முடியுமா? நானும், ஒபெரா மினி மூலம்தான் படித்து வருகிறேன்.
By: ramalingam natarajan on July 31, 2010
at 10:30 pm
அன்பின் நண்பரே,
எமுலேஷன் முறையில் செய்யலாம் என்று கூறுகிறார்கள். விண்டோஸின் மேல் அதை ஒரு செயலியாக ஓட்டலாம். நான் சோதித்துப் பார்த்ததில்லை.
நன்றி.
By: Pandian on July 31, 2010
at 10:33 pm
தமிழ் எழுத்துருக்களை இறக்கி நேரடியாக நிறுவ வாய்ப்பு இல்லை. சில கான்பிகரேஷன் மாறுதல்களைச் செய்து எழுத்துருக்களை விண்டோஸ் கைபேசிக்குள் நுழைக்கலாம். அதனால் படிக்க வாய்ப்பு வருமே தவிற எழுத வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நமது முரசு செயலியின் செல்லினம் உள்ளது அதுவும் ஜாவாவை அடிப்படையாகக் கொண்டது.
By: Pandian on July 31, 2010
at 10:38 pm
நன்றி திரு. பாண்டியன். நன்றாக இருக்கும் செல்லைக் கெடுத்து ஏன் செங்கல் ஆக்க வேண்டும். curiosity will kill the cat என்று ஆகி விடாமல் இருக்க வேண்டும். நன்றி.
By: ramalingam natarajan on July 31, 2010
at 11:29 pm
அது என்னவோ சரிதான்!
சாகாத பூனைதானே நமக்கு வேண்டும்.
எந்த எதிர்பார்ப்புகளோடு பிஸ் போனுக்கு செல்கிறோம். அந்த அடிப்படை எதிர்பார்ப்புகளையே எதிர்கொள்ளவில்லை நண்பரே. தொங்கிவிடுகிறது. இதற்கு முன் பயன்படுத்திய மொபைல்களை வெறும் GSM மோடமாகவும், SMS நிலையமாகவும் வன்முறையைப் பிரயோகப்படுத்திய போதும் எதையும் தாங்கி நின்றது. பேசப் பழக பேஸிக் போன் போதுமே.
By: Pandian on August 1, 2010
at 10:11 am
அன்பின் பாண்டியன் ,
ஆஹா , அண்ணன் ரசீது கதவுகள் (Bill Gates) தனது வெகுநாளைய வாடிக்கையாளர் ஒருவரை தற்போது இழந்து விட்டார் போலிருக்கிறதே ?!.
பிறகு நானும் இது போல பல பூனைகளை கொன்று இருக்கிறேன். பூனை செத்தால் தானே நமக்கு அதை சுடுகாடு எடுத்துப்போக வழி தெரியும். ? அதனால் தான் கொன்றேன் !!.
// ஒரு வழியாக வார இறுதியில் கிடைத்த விலைக்கு அந்த சோம்பேறிக்கு மறுமணம் செய்துவைத்துவிட்டு, //
ROFTL , உண்மையில முடியல. இனிமேல் செகண்ட் ஹேண்ட் மொபைல் விக்கிற பசங்களிடம் இந்த விஷயத்தை சொல்லி வச்சுற வேண்டியது தான். இடுகைக்கு நன்றி…
By: Muhammad Ismail .H, PHD., on August 14, 2010
at 10:20 pm
மறுமொழிக்கு நன்றி.
By: Pandian on August 15, 2010
at 1:26 pm