ஒரு நண்பரைச் சந்திக்க கும்பகோணம் பயணம் செய்யவேண்டியிருந்தது. திருச்சி – புதுகை சாலை ஒற்றைச் சாலையாக இருந்த போது கூட தஞ்சை – புதுகை மாநிலச் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தது. என்றாலும் பொதுவான தேவைகளுக்கு புதுகை மக்கள் திருச்சியையோ அல்லது மதுரையையோதான் இன்றும் சார்ந்திருக்கிறோம். இதனால் காரண காரியம் இல்லாமல் தஞ்சைத் தரணிக்கு விஜயம் செய்வது மிகக் குறைவு. காரணம் ஒன்று இருக்கிறது என்றவுடன் மனதில் தோன்றியது அழகு கொட்டிக் கிடக்கும் தாராசுரம்.
யுனெஸ்கோவினால் கடந்த காலத்தில் தத்தெடுக்கப்பெற்ற 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேஸ்வரர் கோயில் வார்த்தைகளால் வடிக்க இயலாத பிரம்மிக்கத்தக்க ஒரு இடம். தஞ்சை பெரியகோயில் பிரம்மாண்டமானது என்றால் தாராசுரம் கோயில் பிரம்மிப்பானது. அழகானது. இந்தக் கோயிலைப் பார்த்து மனதைப் பறிகொடுக்காதவர்கள் கிடையவே கிடையாது.
அதை நினைத்து கிளம்பும்போதே மனது பரபரப்பானது. திட்டமிடப்படாத பயணம் என்பதால் காமிராவும் அதன் சகா பாட்டரியும் முழுத்தூக்கத்தில் இருந்தார்கள். அலைபேசியில் இருந்த அரைகுறை காமிராவை சிரமேல் வைத்து பயணத்தைத் தொடங்கினோம்.
அம்மா புண்ணித்தில் பேருந்து கட்டணங்கள் ஏறிய பின் முதல் தஞ்சை பயணம் இல்லவா. எனவே 30 ரூபாய் பணத்தை எடுத்து டிக்கட் எடுக்க நீட்ட..
அண்ணே தஞ்சாவூர் ஒரு டிக்கட் தாங்க
3 ரூபாய் கொடுங்க
சில்லரை இல்லையே
அட டிக்கட் 33 ரூபாய். 30தான் கொடுத்திருக்கீங்க.
அசடு வழிந்து இன்னொரு 3 ரூபாயைக் கொடுத்து தஞ்சை வந்து இறங்கினோம். பின்னர் தஞ்சை – கும்பகோணம். இந்த வழியில் பேருந்தில் பயணம் செய்வதற்கு அதிகப் பொறுமை வேண்டும். சந்து, தெரு, தார்ச்சாலைகளாக மாற்றப்பட்ட அந்தக் காலத்து மாட்டு வண்டிப்பாதை என்று அனைத்திலும் பயணம் செய்தல் வேண்டும்.
செல்லும் வழியில் பெரிய கோயில் தரிசனம்!

தொடர்ந்த பயணம் வாய்க்கால் ஓடும் சிற்றூர்கள், அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாத அரசியலடியவர்களின் கட்வுட் போஸ்டர்கள், காலைநேரப் பனி, ….. மிக அழகானதொரு பயணத்தொடர்ந்து தாராசுரம் வந்து சேர்ந்தோம். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அதன் நுழைவாயில் போன்று அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.
இங்கு அமைந்திருக்கும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில்தான் நமது இலக்கு.
பெரியகோயில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான அங்கீகரிக்கப்பட்டதும் வெகுவாக முயற்சி செய்து இந்தக் கோயிலையும் யுனெஸ்கோ குடையின் கீழ் வரச் செய்த வரலாற்று மற்றும் தொல்லியல் அறிஞர்களை வணங்கியாகவேண்டும்.
தொல்லியல் துறையின் கீழ் இருந்தாலும் பெருவாரியான அறிஞர் பெருமக்கள் முயற்சி எடுக்கும் முன்னர் தாராசுரத்தின் கைவிடப்பட்ட கோயிலாக மாறிக் கொண்டிருந்தது அந்த ஆலயம். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பெற்று சுற்றி வர பச்சைப் பாட்டாடையென அழகுற அமைக்கப்பெற்ற பூங்கா என்று கண்ணைக் கொள்ளை அடிக்கிறது இப்போதுள்ள அழகு….. என் கண்ணே பட்டுவிடுமே!
அழிந்த நிலையில் பழைய முன் கோபுரம்
ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவத யானைகளால் இழுக்கப்படும் அழகு இந்தக் கோயிலின் சிறப்பு. இதில் உள்ள சக்கரம் தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

யானையின் அலங்காரத்தைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். சிற்பியின் கற்பனையைக் கண்டு வியப்பதா. கற்பனையை நிஜமாக்கிய அவரது திறமையைக் கண்டு வியப்பதா?

மண்டபத்தின் தூண்கள் பார்ப்பவரை மலைக்கவைக்கும் அழகுடையவை.

மாடங்களில் உள்ள எழில்மிகு தெய்வ உருவங்கள்

நம்ப ஊர் கல்லில் இத்தணை அலங்காரம் செய்ய முடியுமா என்ன?

புராணக் கதைகள் அறிந்து கொண்டு இந்தக் கோயிலுக்குச் சென்றால் அன்று ஆர்வத்திற்கு செம தீனிதான்
தூண்களில் நடன மாதர்கள் தரும் நடன பாவனைகள் செதுக்கப்பட்டுள்ளன.

சிறிய அளவில் மிக நேர்த்தியாக உள்ள அந்த சிலைகள்தான் நம்மைத் திரும்ப திரும்ப இந்தக் கோயிலுக்கு வரத் தூண்டுகின்றன.


திருக்கல்யாணம்

வீணாதாரர் – மேலே இருக்கும் நர்த்தன கணபதியைப் பார்க்க மறவாதீர். விரக்கடை உயரமுள்ள இடத்தில் எத்தணை நேர்த்தி?

காளை வாகனர்

சிவதாண்டவம்

கஜ சம்ஹாரரும் அவரது தீரத்தை பயத்துடன் நோக்கும் பார்வதியும்

கோயிலின் ஒவ்வொரு அடியிலும் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது. புராணக் கதைகள் ஒளிந்துள்ளன.

சிற்ப வரி மட்டுமல்ல – புராணக் கதைகளின் விளக்கமும் கூட

வித்தியாசமான ஜன்னல் வடிவங்கள்

நாயக்கர் காலத்தில் கோயில் முழுக்க வண்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்

அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு

இந்த திருச்சுற்றில் கரிகாலனும் இராஜராஜனும் சுற்றி வந்து சிவனை வழிபட்டார்களாம். அந்த ராஜகம்பீரக் காட்சியைப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாதா?

பின்புற மாடத்தில் லிங்கோத்பவர்


சிற்பிகளின் சித்து விளையாட்டுக்கள்

கும்பகோணம் பக்கம் சென்றால் அவசியம் சென்று வாருங்கள்.





Isai padi kattukalai maranthu vitteere. Irunthaalum niraivana pugaipadangal. Nandri
By: Anusuya on December 27, 2011
at 11:51 am
இதற்குத்தான் தாங்கள் வேண்டும் என்பது. அடுத்தமுறை செல்லும் போது எடுத்து வருகிறேன். நன்றி
By: Pandian on December 27, 2011
at 12:03 pm
நான் கூட தஞ்சாவூர், கும்பகோணம் சென்று வந்தேன்.
By: pudugaithendral on January 2, 2012
at 9:49 am
அருமை.
வருகைக்கு நன்றி
By: Pandian on January 2, 2012
at 10:57 am